பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்க நடவடிக்கை. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 04 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுமென ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ளமை தொடர்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு பெருந்தோட்டமக்கள் சார்பில் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்..
மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என பட்ஷட் உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாணத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவரத்தையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். நுவரெலியாவின் பாரிய அபிவிருத்தி திட்டத்தின் ஓர் அங்கமாக நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்படவுள்ளது. கொத்மலையில் அமையவுள்ள காலநிலை தொடர்பான பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நுவரெலியா மாவட்டத்தில் விரைவில் இரண்டு பல்கலைக்கழகங்கள் வரவுள்ளன.
அதேபோல இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இவ்வாறான புதிய பல்கலைக்கழகங்கள்மூலம் மத்திய மாகாணம் உயர் கல்வி மையமாக மாறும். இதன்மூலம் மலையக இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டெடுத்து வருகின்றார். நெருக்கடியான காலகட்டத்திலும் மக்களுக்கு பயன்தரக்கூடிய பல முன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளதை வரவேற்கின்றோம்.