2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதே எமது கேள்வியாக உள்ளதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார்.
அரசாங்கம் கடந்த வருடத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் நூற்றுக்கு 90 வீதமான யோசனைகளை , அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்த முடியாமல்போனதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட த்தை ஜனாதிபதி முன்வைத்து உரையாற்றினார்.
இதையடுத்து அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடந்த வருடம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகளில் 90 வீதமானவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதை, நாம் அறிவோம்.
அதேபோன்று அரசாங்கத்தால் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பும், இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனை, நடைமுறைப்படுத்தாமல் வேறு எதையும் முன்னெடுக்க முடியாது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி சிறந்த விடயங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். .எனினும் அரசாங்கத்தினால் இதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதே கேள்வியாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்