இன்பங்கள் நிலைத்து, துன்பங்கள் நீங்கி, எல்லா மனிதரும் சமன் என்ற அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் ஓர் அடையாளத்திருநாளாகத் திகழும் தீபாவளித்திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்துச்செய்தியில்…
மனித குலத்தின் மகத்தான வாழ்வின் வெற்றி என்பது புதிய உலகு நோக்கி நிமிர்ந்தெழும் காலத்தை படைப்பதே ஆகும்..
யாமார்க்கும் அடிமையல்லோம்
யமனை அஞ்சோம்…
என்ற எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லவும்
முயல்வோம்,.. வெல்வோம்,… நிமிர்வோம்,.. உளம் சோரோம் என்ற எமது இலட்சியப்பணம்
எண்ணிய இலக்கை எட்டவும்,…
நாம் இடையறாது உழைப்போம்!
எம் தமிழ் தேசம் தலை நிமிரவும்
அரசியல், பொருளாதார, சமூக சமத்துவ நீதி ஓங்கவும்,..
பாமர மக்களின் வாழ்வுயரவும்
உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்லவும்,..
அழிவாயுதங்கள் அன்றி
அறிவாயுதம் ஒன்றே
மாற்று வழியென நாம்
பாதையை மாற்றினோம்
பயணத்தை நிறுத்தவில்லை,..
தீபாவளித்திருநாள் என்பது வெறுமனே புத்தாடை அணியவும்,..பொது விழாக்களை பட்டாசு கொழுத்தி கொண்டாடி மகிழவும்
உண்டாகிய நாள் மட்டுமல்ல. மாறாக, மாற்றமொன்று எங்கள் மண்ணில் மலர்ந்ததை கொண்டாடும் பெருநாளாக
அது மலர வேண்டும்.
அழிவு யுத்தத்தின் அநீதிகளை கடந்து வந்த எமது மக்கள் நிம்மதிப் பெருமூச்சை இன்று விடுகின்றனர்.
அந்த நிம்மதிப் பெருமூச்சு சுதந்திரக்காற்றாக எமது மண்ணில் நீடித்து வீச வேண்டும்.
மாற்றமொன்றே எமக்கு தேவை, மாற்றங்களை எமது மண்ணில் உருவாக்கி காட்டுவதற்கு மாறாக, நாளாந்தம் வாராந்தம் மாதாந்தம் என புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். அவைகளை ஊதிப்பெரும்பித்து
மக்களை உசுப்பேற்றி கூச்சலிட்டும் வருகின்றனர். அதன் மூலம் அடுத்த தேர்தல் போட்டிக்கான அத்திவாரங்களே இங்கு நடந்தேறி வருகின்றன.
தேர்தலுக்காக அன்றி எம் தமிழ் தேசத்திற்காக தியாகங்களை ஏற்று நடக்கும் எமது யதார்த்த வழிமுறை மீது யாரும் சேற்றை வாரித்தூற்றுவோர் முடிந்தளவு தூற்றட்டும். நாம் நேசிக்கும் மக்களுக்கான நிரந்தர விடியலை எட்டும் எமது இலட்சிய பயணத்தை
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவதூறு பொழிவோரை எதிர்கொண்டு நாம் பயணிப்பதே இன்று நாம் ஆற்றும் தியாகங்கள். கூச்சல்களாலும், கொக்கரிப்புகளாலும் எந்த கோட்டையின் கதவுகளும் திறக்காது. அழகார்ந்த உரிமை வாழ்வை
சகல மக்களும் அனுபவித்து நிமிர வேண்டும். இல்லங்கள் தோறும் துயரங்கள் அற்ற மகிழ் வாழ்வு மலர வேண்டும்,..
தீபாவளித்திருநாளின் அர்த்தங்கள் தேசமெங்கும் தீப ஒளியாக துலங்க வேண்டும்.
அறம் வெல்லும்,.. அநீதி தோற்கும்!!,..
இவ்வாறு தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்!