நுவரெலியா தபால் நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
இதன்பிரகாரம் இன்று முதல் அனைத்து தபால் ஊழியர்களையும் பணிக்கு சமுகமளிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
ஊடக அமைச்சில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டடம் 1894 இல் கட்டப்பட்டது என்பதை நாம் அறிவோம். மேலும், 2007இல் தொல்லியல் திணைக்களம் தொல்லியல் மதிப்பு கொண்ட கட்டடம் என இதற்கு பெயரிட்டுள்ளது. எனவே, இக்கட்டடத்தை அவ்வாறே வைத்து முதலீடு செய்யுமாறு தபால் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கூறி வருகின்றனர். தபால் கட்டடத்தை அங்கேயே வைத்து, அங்கு தபால் சேவை இயங்குவதற்கும் இடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்நேரத்தில் முதலீடுகள் செய்ய வேண்டியது அவசியமாகும். அதற்கு நாங்களும் சம்மதித்துள்ளோம்.
தபால் என்பது ஒரு அத்தியாவசிய சேவையாகும். ஒரு நாள் கூட தாமதம் செய்ய முடியாத ஒன்று. தபால் துறை வேகமாக வளர்ந்து வரும் காலம் இது. இந்த நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில்தான் தபால்துறை அதிக வருமானம் ஈட்டுகிறது.
மேலும், தபால் துறையை டிஜிட்டல் மயமாக்கி, மற்ற நாடுகளைப் போல புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேற்ற தெளிவான திட்டத்தை வகுத்துள்ளோம்.
அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.