சிவப்பு எச்சரிக்கை விடுத்தும் மின்சார நிலுவைக் கட்டணத்தை செலுத்தத் தவறிய பத்து இலட்சம் பேரின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் நிலுவைக் கட்டணத்தை செலுத்தாவிடின், மின்விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டு மின்பாவனைக்கான கணக்கும் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
துண்டிக்கப்பட்ட இணைப்புக்களை மீளப் பெறுவதற்காக அறவிடப்படும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி கெவிந்து குமாரதுங்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை மேலும் குறைக்க முடியுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இலங்கை பொதுபயன்பாடட்டு ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மின்கட்டணத்தை செலுத்தாத தரப்பினரை இலக்கு வைத்து அவர்களின், மின் விநியோகத்தை துண்டிக்குமாறு எவருக்கும் அறிவுறுத்தப்படவில்லை.கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும். இது, நான், அமைச்சரான பின்னர் எடுத்த தீர்மானமல்ல. காலம் காலமாகவே இத்தீர்மானம் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்