சிகிரியா குன்றை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடத்துடன் நவீன வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட ஊடகவியலாளர் கூட்டுறவு அமைப்பின் ஏற்பாட்டிலும் கலாசார அமைச்சு, மத்திய கலாசார நிதியம், தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையிலும் சிகிரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “சிகிரியாவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி எதிர்காலத்தில் சிகிரியா தொடர்பாக 10 மொழிகளில் விளக்கம் பெற்றுக்கொள்வதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பண்டைய இராஜதானியாக விளங்கிய காலத்தில் சிகிரியா குன்றின் வடக்குத் திசையில் பயன்படுத்தப்பட்ட பாதையொன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதையும் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ‘சிங்க பாதம்’ என்று அழைக்கப்படும் நுழைவாயிலினூடாக குன்றுக்குச் செல்லும் படிக்கட்டுகளையும் மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அக்குறணை குறூப் நிருபர்