காசா மீதான இஸ்ரேலின் போர் தொடர்பில் பொலிவியா இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்திருப்பதோடு மேலும் இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலில் உள்ள தமது தூதுவர்களை திரும்ப அழைத்துள்ளன.
“காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் ஒழுங்கற்ற இராணுவ நடவடிக்கையை கண்டிப்பதோடு இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை துண்டிக்க தீர்மானித்துள்ளோம்” என்று பொலிவிய பிரதி வெளியுறவு அமைச்சர் பிரெட்டி மமானி தெரிவித்துள்ளார். காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதாகவும் பொலிவியா தெரிவித்துள்ளது.
இதே நேரம் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் சிலி, காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்திருப்பதோடு இஸ்ரேலுக்கான தமது தூதுவர்களை திரும்ப அழைத்துள்ளன. பிரேசிலும் இஸ்ரேலை கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியில் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி நாடுகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.