பதுளை மீகஹகிவுல பிரதேசத்தில் இன்று (20) மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் இன்று (20) காலை 11.00 மணியளவில் பதுளை நகரின் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து மீகஹகிவுல அகிரிய நோக்கி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பாத ஹண்டி என்ற இடத்தில் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தின்போது பஸ்ஸில் ஏறக்குறைய 40 பேர் இருந்ததாகவும் காயமடைந்தவர்களில் பெண்களும், சிறு குழந்தைகளும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரும் காயமடைந்துள்ளதோடு, பஸ்சும் பலத்த சேதமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.