ஓமான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஓ.எல் அமீர் அஜ்வத் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயல் திறன் மீளாய்வு, திட்ட அமுலாக்கல், கொன்சியுலர் சேவைகள் மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளராக இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரியான இவர் சவூதி அரேபியா, சுவிட்ஸர்லாந்து, இந்தியா, சிங்கப்பூர், புரூணை, ஓமான் ஆகிய நாடுகள் மற்றும் யெமன் குடியரசுக்கான இலங்கையின் பிரதிநிதியாக கடமையாற்றியதோடு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
நளீமியா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட முதுமாணியுமாவார். உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக 1997 இல் இவர் சத்தியப்பிரமணம் செய்து கொண்டார்.
“இலங்கை – ஓமான் உறவுகள்: நேற்று, இன்று, நாளை” என்ற இருதரப்பு உறவுகள் பற்றிய ஆய்வு நூலை அண்மையில் இவர் எழுதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.