நாட்டில் நிலவும் அதி கூடிய வெப்பநிலையை கருத்திற் கொண்டு இன்று பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது.பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சுத்தமான குடிநீர் அல்லது பானங்களை உபயோகப்படுத்துமாறும் அத்துடன் பரீட்சைக்கு செல்லும் போது கடும் வெயிலிலிருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குடைகளை எடுத்துச் செல்லுமாறும் அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அலுத்கமகே அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:
பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் நிலவும் அதி கூடிய வெப்பநிலை தொடர்பில், கூடிய கவனம் செலுத்துவது அவசியம். அந்த வகையில் சுத்தமான நீர் உட்பட குளிப்பானங்களை அருந்துவதன் மூலம் உடலை வெப்ப தன்மையிலிருந்து பாதுகாக்க முடியும். அத்துடன் பரீட்சை இடைவேளை காலத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து குளிர்ச்சியான இடங்களில் அமர்வதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்விசிறிக்கு கீழே அமர்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, நுளம்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பரீட்சை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட நுளம்பு ஒழிப்பு மற்றும் சுத்தப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்