உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இலங்கை அணி தனது கடைசி பயிற்சிப் போட்டியில் இன்று (03) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மோதவுள்ளது.
பங்களாதேஷுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டி நடைபெற்ற அதே, குவஹாத்தி பார்சபரா கிரிக்கெட் அரங்கில் பகலிரவு ஆட்டமாக இன்றைய போட்டி நடைபெறும்.
முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சோபிக்கத் தவறிய நிலையில் பங்களாதேஷுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.
இதனால் இன்றைய போட்டியில் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்வதற்கு இலங்கை வீரர்கள் தனது திறமையை உறுதி செய்வது கட்டாயமாக உள்ளது. குறிப்பாக தொடர்ந்து துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிய தசுன் ஷானக்க முதல் பயிற்சிப் போட்டியில் 3 ஓட்டங்களையே பெற்றார். இதனால் அவர் இன்றைய தினம் ஓட்டங்களை பெறுவது உலகக் கிண்ணத்தில் ஆட உதவியாக அமையும்.
முதல் பயிற்சிப் போட்டியின்போதும் 34 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோள்பட்டை காயத்தால் வெளியேறிய குசல் ஜனித் பெரேராவுக்கு இன்றைய தினம் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பங்களாதேஷுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க (68) மற்றும் தனஞ்சய டி சில்வா (55) ஆகியோர் மாத்திரமே அரைச்சதம் பெற்றதோடு இலங்கை அணி 49.1 ஓவர்களில் 263 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இலங்கை பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்காத நிலையில் பங்களாதேஷ் அணி 42 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக எட்டியது. எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஒக்டோபர் 07 ஆம் திகதி டெல்லியில் நடைபெறும்.