அமைச்சர் நிமல் தலைமையில் அவசர கலந்துரையாடல்
ஸ்ரீலங்கன் விமான சேவையில் எட்டு விமான சேவைகள் தாமதமாகியதால், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.அமைச்சர் நிமல் சிறீபாலடிசில்வா தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், ஸ்ரீலங்கன் விமான சேவை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில்,விமானங்கள் தாமதமடைந்தமைக்கான காரணங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.விமானங்களில் நிலவிய தொழினுட்பக் கோளாறுகளே இந்தத் தாமதத்திற்குக் காரணமென,அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இது குறித்து தெரிவித்த விமான சேவை நிர்வாக அதிகாரிகள்,தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக சட்டப்படி வேலை மேற்கொண்டதாலே இந்நிலை உருவானதாக தெரிவித்துள்ளனர்.இவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், தற்போது 21 விமானங்கள் சேவையில் உள்ளன. இதற்காக 260 விமானமோட்டிகள் சேவையிலுள்ளனர்.ஒரு விமானத்திற்காக 12 பேர் என்ற அடிப்படையில் இவர்கள் சேவையாற்றுகின்றனர்.
இது, சர்வதேச ரீதியான சட்டங்களுக்கு உட்பட்டதாகும். அதேவேளை, சர்வதேச சட்டங்களின்படி விமானி ஒருவர் மாதத்திற்கு 100 மணித்தியாலம் பறக்க வேண்டும். கடந்த காலங்களில் எமது விமானிகள் 60 மணித்தியாலங்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டுள்ளனர். 80 மணித்தியாலமாவது இது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும்.
இவ்வாறு செயற்பட்டால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது. சம்பள முரண்பாடுகள் தொழிற்சங்கங்களின் மத்தியில் காணப்படுகின்றன.ஶ்ரீலங்கன் விமான சேவையானது தற்போது 1.2 பில்லியன் அமெரிக்கடொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது.இந்நிலையில் இதற்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)