உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நேற்று (27) காலை குவாஹாத்தி நகரை சென்றடைந்தது. பதினைந்து பேர் கொண்ட இலங்கை குழாத்துடன் மேலதிக வீரராக சாமிக்க கருணாரத்னவும் இலங்கை அணியுடன் சென்றுள்ளார்.
எனினும் முன்னணி சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உபாதையில் இருந்து குணமடையாத நிலையில் கடைசி நேரத்தில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு சுழற்பந்து சகலதுறை வீரரான துஷான் ஹேமன்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹசரங்க தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல் தகுதி பெறும் பட்சத்தில் குழாத்தில் காயங்களுக்காக மாற்று வீரராக உடன் சேர்க்கப்படுவார் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
குவாஹாத்தியின் லோகொப்ரியா கோபினாத் போர்தோலோய் சர்வதேச விமானநிலையத்தை அடைந்த இலங்கை அணிக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து அணியினர் விவென்தா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை அணியினர் பயிற்சிப் போட்டிகளுக்காக அங்கு தங்கவுள்ளனர். இலங்கை அணி நாளை (29) குவாஹாத்தியில் முதல் பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக பங்களாதேஷ் அணி நேற்று மாலை குவாஹாத்தியை அடைந்தது.
இலங்கை அணி தொடர்ந்து ஒக்டோபர் 3 ஆம் திகதி இதே குவாஹாத்தி பர்சபரா அரங்கில் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
ஒக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உலகக் கிண்ணத்தில் இலங்கை தனது முதல் போட்டியில் ஒக்டோபர் 7 ஆம் திகதி தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி டெல்லி, அருன் ஜெயிட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.