ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்திருக்கும் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க, எங்கே என விளையாட்டுத் துறை அமைச்சின் சிறப்பு விசாரணை பிரிவு தேடி வருகிறது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் மீது குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்திய நிலையிலேயே அவர் தேடப்பட்டு வருகிறார்.
2020 லங்கா பீரீமியர் லீக் தொடரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் கால அவசகாசம் கோரியதை அடுத்து 38 வயதான முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர மீது கொழும்பு நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்ததோடு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
‘அவர் தலைமறைவாகி இருப்பதுபோல் தெரிகிறது’ என்று சிறப்பு விசாரணை பிரிவு வட்டாரம் தெரிவித்துள்ளது. ‘அவர் எங்கே இருக்கிறார் என்பதை நாம் தேடி வருகிறோம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 இன் முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது அதில் பங்கேற்ற இரு வீரர்களை டுபாயில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடக் கோரியதாகவே சச்சித்ர மீது குற்றம்சாட்டப்படுகிறது. இது இலங்கையில் குற்றவியல் குற்றமாகும்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் சேனநாயக்க தனது நற்பெயரை சீர்குலைக்கும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் அவர் 78 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதோடு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியிருக்கும் அவர் விக்கெட் வீழ்த்தத் தவறினார்.