Friday, May 10, 2024
Home » ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்; திருத்தம் அவசியம்

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்; திருத்தம் அவசியம்

- பாராளுமன்ற விசேட பெரும்பான்மை; பொதுசன வாக்கெடுப்பும் அவசியம்

by Rizwan Segu Mohideen
August 10, 2023 1:57 pm 0 comment

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “ஆயுள்வேதம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

எனவே அவற்றை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற விசேட பெரும்பான்மை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய “ஆயுள்வேதம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் அரசியலமைப்புடன் இணங்குகின்றதா இல்லையா என்பது பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கீழ் வருமாறாகும்:

(1) சட்ட மூலத்தின் 2, 3, 27, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 39, 40 மற்றும் 41 வாசகங்கள் அரசியலமைப்பின் 9 ஆம் உறுப்புரையுடன் முரணாவதுடன் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட விசேட பெரும்பான்மை வாக்குகளுடனும் மற்றும் 83 ஆம் உறுப்புரையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் மக்கள் தீர்ப்பொன்றின் மூலமும் மாத்திரமே நிறைவேற்ற முடியும்.

சட்ட மூலத்தின் 2, 3, 27, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 39, 40 மற்றும் 41 ஆம் வாசகங்களில் ‘ஆயுர்வேத பைசஜ்ஜக’ (ආයුර්වේද භෛසජ්ජක) மற்றும் ‘பைசஜ்ஜக’ (භෛසජ්ජක) ஆகிய சொற்களை நீக்குவதன் மூலம் திருத்தம் செய்தால் முரண்பாடு நீங்கும்;

(2) சட்டமூலத்தின் 46(4) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரணாவதுடன் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட விசேட பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

உயர்நீதிமன்ற தீர்மானத்தின் 53 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் திருத்தங்களை சட்டமூலத்தில் மேற்கொண்டால் இந்த முரண்பாடு நீங்கும்;

(3) சட்டமூலத்தின் 11(3) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதுடன் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட விசேட பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

உயர்நீதிமன்ற தீர்மானத்தின் 54 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் திருத்தங்களை சட்டமூலத்தில் மேற்கொண்டால் இந்த முரண்பாடு நீங்கும்;

(4) பிரதான சட்டத்தை திருத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் ஏனைய விடயங்களில், பிரதான சட்டத்தின் 13(1) ஆம் பிரிவின் (உ) மற்றும் (ஊ) உப பிரிவுகள் நீக்கப்பட்ட சட்டமூலத்தின் 13 ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதுடன் 84 உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட விசேட பெருபான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

பிரதான சட்டத்தின் 13(1) ஆம் வாசகத்தின் (உ) மற்றும் (ஊ) உப பிரிவுகளை நீக்காவிட்டால் இந்த முரண்பாடு நீங்கும்;

(5) சட்டமூலத்தின் 24(1)(அ), 25 மற்றும் 46(2) ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையுடன் முரண்படுவதுடன் 84 உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவையான விசேட பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

அவ் வாசங்களை நீக்குவதன் மூலம் முரண்பாடு நீங்கும்; மற்றும்

(6) சட்டமூலத்தின் 46(1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதுடன் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தேவையான விசேட பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் 55 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தங்களை சட்டமூலத்தில் மேற்கொண்டால் இந்த முரண்பாடு நீங்கும்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென பிரதி சபாநாயகர் கட்டளையிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT