பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நீதிபதியை மாத்திரம் கொண்ட விசாரணைக்கு விண்ணப்பிப்பதற்காக கடந்த திங்கட்கிழமை (24) சிட்னி டவ்னிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் தோன்றினார்.
கடந்த ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தின்போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டை குணதிலக்க மறுத்துள்ளார். இந்நிலையில் நீதிபதியை மாத்திரம் கொண்ட விசாரணை ஒன்றுக்கான விண்ணப்பத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி வர்விக் ஹன்ட் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ஐந்து நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது இந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவதற்கு குணதிலக்கவின் வழக்கறிஞரான முருகன் தங்கராஜ் மற்றொரு கோரிக்கையையும் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். எனவே தமது கட்சிக்காரர் குற்றமற்றவராயின் கூடிய விரைவில் நாடு திரும்ப முடியுமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பிப்பதற்கும் தமது குடும்பத்திற்கு நிதி ஆதாரத்தை வழங்குவதற்கும் வழக்கை விரைவுபடுத்துவது அவசிமாக இருப்பதாகவும் குணதிலக்கவின் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
இதில் குணதிலக அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவரது வழக்கறிஞர், தற்போது நீடிக்கும் சட்ட செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களில் அவர் தொடர்பில் வெளியாகும் செய்திகளால் அது தீவிரம் அடைந்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பத்திரிகையில் முதல் பக்கத்தில் தனுஷ்க குணதிலக்க மீதான குற்றச்சாட்டுகளை கண்டு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புப் பற்றி தாம் கவலை அடைந்திருப்பதாக நீதிபதி ஹன்ட் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.