USAID இலங்கைக்கு மேலும் 65 மில்லியன் டொலர் உதவி

நிதியமைச்சில், USAID அபிவிருத்தி நோக்கத்திற்கான உதவி ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வின்போது, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக்

- சமந்தா பவர் அறிவித்த 60 மில்லியன் டொலருக்கு மேலதிகமானது
- இலங்கையுடன் 5 வருட ஒப்பந்தத்திலும் USAID கைச்சாத்து
- இலங்கை நெருக்கடிக்கு USAID இதுவரை 125 மில்லியன் டொலர் உதவி
- அமெரிக்கா 1956 முதல் இலங்கைக்கு 2 பில்லியன் டொலருக்கும் அதிக உதவி

USAD நிர்வாகி சமந்தா பவரின் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (ரூ. 23 பில்லியன்) 5 வருட காலப்பகுதியில் உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தார்.

இந்த உதவி தொடர்பான ஒப்பந்தம், USAID இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் கேப்ரியல் க்ராவ் (Gabriel Grau) மற்றும் இலங்கையின் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கிடையில் நிதியமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி நோக்கங்களுக்கான உதவி ஒப்பந்தத்தின்  (DOAG) கீழ் இது வழங்கப்படுவதாக, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இந்த நிதியளிப்பானது இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த வாரம் USAID நிர்வாகி சமந்தா பவர் அறிவித்த 60 மில்லியன் டொலர் (ரூ. 21 பில்லியன்) பெறுமதியான புதிய மனிதாபிமான மற்றும் உரம் வழங்கும் உதவிகளுக்கு மேலதிகமாக வழங்கப்படுவதாக, அமெரிக்க தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த புதிய இருதரப்பு உடன்படிக்கை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவிக்கையில்,

"அமெரிக்காவும் அமெரிக்க மக்களும் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான தமது நீடித்த மற்றும் வலுவான பங்காண்மை தொடர்பில் பெருமிதம் கொள்கிறார்கள். நின மற்றும் அமைதியான இலங்கையை முன்னேற்றுவதற்கு உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் முன்முயற்சிகளை ஆதரிப்பதில் நாங்கள் பூரண உறுதியுடன் உள்ளோம். அது அனைத்து நாடுகளும் இணைக்கப்பட்ட, செழிப்பான, மீள்தன்மையுடைய மற்றும் பாதுகாப்பான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ - பசிபிக் பகுதியை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாகும்." என்றார்

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக, சந்தை சார்ந்த வளர்ச்சி, சுற்றுச்சூழலின் நிலைபேறானதன்மை மற்றும் மீள்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு இலங்கைக்கு உதவி செய்ய அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. இலங்கைக்கான அனைத்து USAD நிதியளிப்புகளும் அன்பளிப்புகள் அல்லது மானியங்களாக வழங்கப்படுவதுடன் கடுமையான கண்காணிப்புத் தராதரங்களைக் கடைப்பிடிக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவானது 1956 ஆம் ஆண்டு முதல் அபிவிருத்தி உதவிகளாக 2 பில்லியன் டொலர்களுக்கும் (சுமார் 720 பில்லியன் இலங்கை ரூபாய்) அதிகமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...