உலகில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த சவூதி அரேபியா தொடர்ந்தும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சவூதி அரேபியா தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை முற்றாக நிராகரிப்பதுடன் அதில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையையும் வழங்கி வருகின்றது.
சவூதி அரேபியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் இராஜதந்திர ரீதியான முன்னெடுப்புகளை ஆழமாகப் பார்க்கும் போது இதனை மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இஸ்லாம் வலியுறுத்தும் நடுநிலையான போக்கை இஸ்லாமிய உலகில் வலுவூட்டும் சவூதி அரேபியா, தனது மனிதாபிமான உதவிகளையும் வழங்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
நடுநிலையான அணுகுமுறை என்பது சவூதி அரேபியாவின் வெறும் கோஷம் மட்டுமல்ல, மாறாக தனது மண்ணில் அது கடைப்பிடித்து வரும் அடிப்படை அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
மனிதர்கள் அனைவரும் நாகரிகத்தின் பங்காளிகள் என்பதை உறுதியாக நம்பும் சவூதி அரேபியா, சர்வதேச ரீதியான நாகரீக செயற்திட்டங்களை கட்டமைக்க முனைகிறது. உலக முஸ்லிம்களின் பிரச்சினைகளை இராஜதந்திர, அரசியல் ரீதியாக துல்லியமான முறையில் அணுகி அவற்றுக்கான தீர்வுகளையும் இந்நாடு பெற்றுக்கொடுத்து வருகின்றது. சவூதி அரேபியா நடுநிலையான போக்கைக் கொண்ட நாடு என்பதற்கான மற்றுமொரு சான்று, சகிப்புத்தன்மை, சகவாழ்வு, வெறுப்புப்பேச்சு மற்றும் ஆக்கிரமிப்பு போன்றவற்றை நிராகரிக்கும் விதிகளை உள்ளடக்கிய, சவூதி அரேபியாவின் 2030 விஷனுக்கு ஏற்றவகையில் அரச அமைச்சகங்களின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகும்.
சுற்றுலாத்துறை அமைச்சானது மொழி, கலாசாரம் ஆகியவற்றால் வேறுபட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு, நாகரிகமான, மனிதநேய தொடர்புகளை கட்டமைக்கும் வகையில் தனது நாட்டின் வாயில்களை திறந்து கொடுத்துள்ளது.
பொதுநலனைக் கருத்தில் கொண்டு மற்ற நாடுகளில் கூட தொழில் துறை அமைச்சு முதலீடு செய்வதுடன் வர்த்தக ரீதியான தொடர்புகளையும் பாரியளவில் உருவாக்கியுள்ளது.
உலக அளவில் சவுதி அரேபியா இரண்டாவது முதலீட்டு நிதியத்தை கொண்டிருப்பதன் மூலமாகவும் உலகெங்கிலுமுள்ள 20 வலுவான பொருளாதாரமிக்க நாடுகளில் ஒன்றாக திகழ்வதன் மூலமாகவும் G20 நாடுகளில் அங்கம் வகிக்கிறது. சவூதி சுகாதார அமைச்சகம் மனிதகுலத்திற்கு வழங்குகின்ற மனிதாபிமான சேவைகள் அதிகம். குறிப்பாக கொரோனா தொற்றின் போது, இரண்டு புனித மசூதிகளின் சேவகர் மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் எவ்வித பாரபட்சமும் இன்றி மக்கள் அனைவருக்கும் பாரிய சுகாதார சேவை வழங்கப்பட்டது. மனிதநேயம், நடுநிலைப் போக்கு, சகிப்புத்தன்மை போன்றவற்றை சவூதி அரேபியா தனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளது.
மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களால் நிறுவப்பட்டது முதல் இன்றுவரை சவூதி அரேபியா இஸ்லாம் வலியுறுத்தும் நடுநிலை சிந்தனையை கடைப்பிடித்து வருவதோடு வன்முறை மற்றும் தீவிரவாதத்தை நிராகரித்தும் வருகின்றது.
அபூ அபீஃப்ஃ முஜாஹித் சுபைர் (விரிவுரையாளர்)
நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி, மூதூர்.