கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்தில் இவ்வருடமும் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி செய்யட் தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், கிறிஸ்தவ மதத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு நத்தார் கொண்டாடினர்.
இங்கு கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உரையாற்றுகையில், “பலஸ்தீனம் மீதான யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அதனை வீற்றோ அதிகாரத்தைப் பாவித்து அமெரிக்கா தடுத்துள்ளது. அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அவர்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை விற்க வேண்டும் என்பதாகும். அதனை விற்றால்தான் அவர்களது பொருளாதாரம் நிலைத்து நிற்கும்.
பலஸ்தீனத்தில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரான காலத்திலிருந்து யுத்தம் இடம்பெற்று வருகிறது. அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மக்களையும் யூதர்கள் தாக்கினார்கள். அவர்கள் எகிப்து வழியாக அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். நான் 1974 களில் ஜெருசலேம் சென்றிருந்தேன். அங்கு வீடு வாசலை இழந்து ஒர் அரபுத் தாய் கதறிக் கொண்டிருந்தார். அவர் அதற்காக நஷ்டஈடு கேட்டு அங்கு கதறினார். அந்த அரபுத் தாயிடம் அருகில் சென்ற விசாரித்தேன். நான் இலங்கையன், என்னால் அவருக்கு அங்கு உதவ முடியாது. அதன் பின்னர் அங்குள்ள அதிகாரிகள் அப்பென்னை அங்குள்ள அகதி முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். பலஸ்தீன மக்கள் 1947 களிலிருந்து பாரிய அவலங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
பலஸ்தீனம் மீதான யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவ வேண்டுமென்று அங்கு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பலஸ்தீன துாதுவர் கிறிஸ்தவ சமய அனுஷ்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
அஷ்ரப் ஏ சமத்