மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி, மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (3) மாலை நடைபெற்றது.
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கினால் மாவட்டத்திலுள்ள உதைபந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்விளையாட்டுப்போட்டி கடந்த யூலை மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 42 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த வீரர்கள், 12 உரிமையாளர்கள் தமக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் பெற்று தமது கழகங்களை அமைத்து போட்டியில் பங்குபற்றி வந்தனர்.
லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்று புள்ளி அடிப்படையில் 4 அணிகள் 2 ஆம் சுற்றுக்கு தெரிவானது. இரண்டாவது சுற்றுக்கு 2 அணிகள் தெரிவானது. இப்போட்டியானது ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையில் நடைபெற்றது.
இதன்போது அயிலன் FC அணி
1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
முதல் நிலையை பெற்றுக்கொண்ட அணிக்கு 10 இலட்சம் ரூபாவும்,2ஆவது இடத்தை பெற்றுக்கொண்ட அணிக்கு 5 இலட்சம் ரூபாவும் பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை சிறி சபாரத்தினம் அறக்கட்டளை வழங்கியது.
இப்போட்டியில் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் வடமாகாண செயலாளர் பத்திநாதன், அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ்,மற்றும் அருட்தந்தையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(மன்னார் குறூப் நிருபர்)