சிவாஜிலிங்கம் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுதலை

சிவாஜிலிங்கம் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுதலை-MK Sivajilingam Released on Bail

இன்று (05) காலை கைதான, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான தற்காலிக விதிமுறை சட்டத்தின் கீழ், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணைக்கு அமைய நீதிமன்றில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பிடியாணைக்கு அமைய வல்வெட்டித்துறை பொலிஸாரால்  அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, இன்றையதினம் (05) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கின் அடுத்த அமர்வில் முன்னிலையாகுமாறு நீதவானினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.


Add new comment

Or log in with...