சட்டவிரோதமாக கடல் வழியாக வந்த தந்தை, மகள் சரண்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ் நிலையத்தில் இன்று (02)   காலை சரணடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து   கடல் மூலம் நேற்று  (01)  அதிகாலை  33 வயதுடைய தந்தையும் 08 வயதுடைய மகளும்  தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த இருவரையும், 33 வயதுடைய நபரின் தந்தை,   மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னப் பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தற்போது 'கொரோனா' காலம் என்பதால், இந்தியாவில் இருந்து  வந்த மகனையும்  மகனின் மகளையும்  அழைத்துக்கொண்டு  வந்து  மடு பொலிஸ் நிலையத்தில் தந்தை சரணடையச் செய்துள்ளார்.

இந்நிலையில், அழைத்துச் சென்ற நபர்  அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  படகு மூலம் வந்த தந்தையையும் மகளையும்  மடு பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகள் முடிந்தவுடன்  குறித்த இருவரும் தனிமைப்படுத்தல்   முகாமிற்கு 
அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

(மன்னார் குறூப்  நிருபர் -லம்பேட் றொசேரியன்)


Add new comment

Or log in with...