குளவி கொட்டியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

- மேலும் 07 பேர் பாதிப்பு 

லிந்துலை, சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (02) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, 07 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லிந்துலை சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நான்கு  பிள்ளைகளின் தாயான அலீமா பீபீ (59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, தேயிலை மலையில் இருந்த குளவிக்கூடு ஒன்று உடைந்து, அதிலிருந்த குளவிகள் கலைந்து வந்து இவர்களை தாக்கியுள்ளது.

இதன்போது குறித்த பெண் தொழிலாளி, குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொதுமக்கள் உதவியுடன் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவருடன்  03 ஆண் தொழிலாளர்களும் 04 பெண் தொழிலாளர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

உயிரிழந்த பெண் தொழிலாளியின் சடலம், லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர் – பி. திருக்கேதீஸ்)

 


Add new comment

Or log in with...