இராணுவம் மீது தாக்கியதாக கைதான ஐவருக்கு பிணை

இராணுவம் மீது தாக்கியதாக கைதான ஐவருக்கு பிணை-5 Youth Released on Bail-Attacked Army-Nagar Kovil-Jaffna

யாழ். நாகர் கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். நாகர் கோவில் பகுதியில் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியதை அடுத்து அங்கு கூடியவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து மறுநாள் 16ஆம் திகதி அதிகாலை இராணுவத்தினர் நாகர் கோவில் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள். அதன் போது நான்கு இளைஞர்களை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் தொடர்ந்து வந்த நாட்களிலும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து மேலும் நான்கு இளைஞர்களை கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட எட்டு இளைஞர்களும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்றையதினம் (29) புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான்  நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இளைஞர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன் போது எட்டு இளைஞர்கள் சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தார். எட்டு இளைஞர்களையும் பிணையில் விடுவிப்பதற்கு பொலிசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு தரப்பின் நீண்ட வாதத்தின் பின்னர், எட்டு இளைஞர்களையும் தலா,  5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் செல்ல மன்று அனுமதித்தது.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...