யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 07 இந்து கோயில்களுக்கு வாராந்தம் பொதுமக்கள் செல்வதற்கு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சூழவுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள 07 இந்துக் கோயில்களில், நித்திய நைமித்திய பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி கட்டுவன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வசாவிளான் மணம்பிறை கோயில், வசாவிளான் சிவன் கோயில், வசாவிளான் நாக கோயில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில், பலாலி நாக தம்பிரான் கோயில், பலாலி சக்திவெளி முருகன் கோயில் என்பவற்றில் வாராந்தம் பூஜைகள் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தகோயில்களில் மாதாந்த பூஜைகள் மற்றும் நைமித்திய பூஜைகளுக்கு இதற்கு முன்னரும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இருந்த போதிலும், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சிவில் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பாதுகாப்பு அதிகாரிகள், வாராந்த பூஜைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமான வாராந்த பூஜையில் 291 பொதுமக்கள் பங்கேற்பதாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு அறிவித்திருந்த போதிலும், 50 பேரே இதில் கலந்துகொண்டனர்.