கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு_ 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு_ 7 ஜெட்வின் ஹோட்டலில் நடைபெற்றன.
இலங்கையில் உள்ள கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பு ஆகியன ஒன்றிணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிசாம் மற்றும் சர்வதேச வர்த்தக இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர் வர்த்தக போரத்தின் ஆளுநர் கலாநிதி சிந்தியா சாங் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இங்கு சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம் கருத்துத் தெரிவிக்ைகயில், “இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் எமது அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பாரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம்.
இதனூடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தவும் முடியும். திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஊடாகவே நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சியடையும் என்பதுடன் இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தகர்கள் போட்டிச் சந்தைக்கு முகம்கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்” என்றார்.
இந்நிகழ்வுக்கு இலங்கையின் சகல பிரதேசங்களில் இருந்தும் முயற்சியாளர்கள் வருகை தந்திருந்ததுடன், சிறுமுயற்சியாளர்கள் தங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் ஆரம்ப நிகழ்வு, கலந்துரையாடல்