தனிப்பட்ட வாழ்க்கை, திருஅவை மற்றும் உலக வாழ்வில் செபத்தின் தேவை மற்றும் வல்லமையை உணர கொடுக்கப்பட்ட இந்த செப ஆண்டில் நமக்கு உதவ நற்செய்தி அறிவிப்புப் பேராயம் முன்னிலையில் இருந்து செயற்படும் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இறைஅருளின் நிகழ்வான ஜூபிலி ஆண்டில் கடவுள் நம்பிக்கையின் ஆற்றலை அதிகப்படுத்த சிறப்பாக செபிப்போம் என்றும், செபத்தின் மதிப்பு, தேவை மற்றும் வல்லமையை இந்த ஜூபிலி ஆண்டில் நாம் கண்டறிவதற்காக செப ஆண்டு ஆரம்பமாகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
ஜனவரி 21 கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய செப உரையின் இறுதியிலேயே அவர் இவ்வாறு எடுத்துரைத்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை திருஅவை மற்றும் உலக வாழ்வில் செபத்தின் தேவை மற்றும் வல்லமையை உணர கொடுக்கப்பட்ட இந்த செப ஆண்டில் நமக்கு உதவ நற்செய்தி அறிவிப்புப் பேராயம் முன்னிலையில் இருந்து செயற்படும் என்றும் தெரிவித்த திருத்தந்தை, இந் நாட்களில் நாம் குறிப்பாக, கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக செபிப்பது அவசியமாகும்.
உக்ரேன், இஸ்ரேல், பலஸ்தீனம் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களின் அமைதிக்காக இறைவனை நோக்கி செபிப்பதில் நாம் சோர்வடையக் கூடாது. பற்றாக்குறையால் பாதிக்கப்படும் பலவீனமானவர்கள், காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சிறார், உணர்வுகள், கனவுகள், மற்றும் எதிர்காலத்தை இழந்தவர்கள் என அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அமைதி கிடைக்க செபிக்க வேண்டியது நமது பொறுப்பு.
மேலும் ஹைட்டியில், கடத்தப்பட்ட ஆறு அருள்சகோதரிகள் மற்றும் மக்களையும் நினைவுகூர்ந்து அன்பான மக்கள் மீது துன்பத்தை ஏற்படுத்தும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், கடத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்காக அனைவரும் செபிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மெரினா ராஜ்