பூநகரி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பாக, சுற்றுலாத்துறை அபிவிருத்தியையிட்டு குளங்களை அமைத்தல் போன்ற அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அம்மாகாண ஆளுநரின் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சியின் பூநகரி பல்லவராயன்கட்டு பிரதேசத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
இந்த தைப்பொங்கல் விழாவில் பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன், வடக்கு மாகாண பதவிநிலை உத்தியோகத்தர்கள், விவசாய பெருமக்கள், பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் போது முன்னராக பல்லவராயன்கட்டு பிரதேசத்திலிருந்து நெற்புதிர் எடுத்து வரப்பட்டு, ஆலயத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதன் பின்னர், கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் தொடர்ந்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து ஐந்து ஆண்டுக்குரிய திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் அதற்கான வேலைத்திட்டங்களை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பரந்தன் குறூப் நிருபர்