இலங்கை வீரர்கள் இந்திய பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கான காலப் பகுதியாக மார்ச் 22 தொடக்கம் மே இறுதி வரையான காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. எனினும் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் போட்டிகளுக்கான இறுதித் திகதி உறுதி செய்யப்படவில்லை.
இதில் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெறாத மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க, மதீஷ பதிரண மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் அனுமதி அளித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பங்களாதேஷ் செல்லும் இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30 தொடக்கம் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நடைபெறும். எனவே, ஐ.பி.எல் தொடருக்கு இலங்கை வீரர்கள் வாங்கப்பட்டாலும் அவர்களின் பங்கேற்பு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.