Sunday, April 28, 2024
Home » ரி20 உலகக் கிண்ணம்; போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகியது டொமினிக்கா

ரி20 உலகக் கிண்ணம்; போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகியது டொமினிக்கா

by Rizwan Segu Mohideen
December 2, 2023 6:16 am 0 comment

ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதில் இருந்து மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டொமினிக்கா விலகியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் போட்டிகளை நடத்துவதற்கு ஏழு கரீபிய நாடுகளில் ஒன்றான டொமினிக்காவை சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் தேர்வு செய்திருந்தது.

இந்தத் தொடரின் போட்டிகள் அமெரிக்காவின் நியூயோர்க், புளொரிடா மற்றும் டெக்ஸாஸிலும் நடைபெறவுள்ளது. இதன்படி ஐ.சி.சியின் பிரதான போட்டிகள் முதல் முறையாக அமெரிக்காவில் நடத்தப்படவுள்ளது.

எனினும் அனைவரினதும் நலன் கருதி போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக டொமினிக்காவின் விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

“தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை பூர்த்தி செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது வேலைகளை முடிப்பதற்கு பல்வேறு ஒப்பந்ததாரர்களினால் வழங்கப்பட்ட காலத்தை பார்க்கும்போது தெரியவருகிறது” என்று அந்த அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொமினிக்காவின் வின்ட்சர் பார்க் விளையாட்டு அரங்கில் உலகக் கிண்ணத்தின் ஒரு குழுநிலை போட்டி மற்றும் இரண்டு சுப்பர் 8 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலுடன் இணைந்து போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜமைக்கா உலகக் கிண்ண போட்டிகளை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. இதனால் மேற்கிந்திய தீவுகளின் பிரபலமான ஜமைக்க தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள சபீன பார்க் மைதானத்தில் போட்டிகள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT