ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின், தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பை உருவாக்கும் சட்டம் மூலத்தை அனுமதிக்கும் பிரேரணை, ஆளும் கட்சியின் வழிமொழிதலுடன் வாக்கெடுப்பின்றி சபையில் ஏக மனதாக நேற்று நிறைவேற்றப்பட்டது.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்த இடைக்கால குழுவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து,
இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுத்து கிரிக்கட் சபையின் பல ஊழல் , மோசடிகளை சபைக்கு வெளியிட்டார்.
இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரின் இடைக்கால குழுவுக்கு முழு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இது தொடர்பில் விவாதம் ஒன்றைக் கோரின.
இதையடுத்து நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தரப்பு முன்வைத்த பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்கு ஆளும் கட்சியும் இணங்கியது.
இதன், பிரேரணை நேற்று முழு நாள் விவாதமாக நடைபெற்றது.
இந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி அரசு தரப்பிலும் பலர் ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பலர் உரையாற்றியபோதும் முன்பு விளையாட்டுத்துறை அமைச்சராகவிருந்த நாமல் ராஜபக்க்ஷ விவாதத்தில் பங்கேற்கவில்லை.
விவாதத்தின் முடிவில் பிரேரணை வாக்கெடுப்பின்றி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் ஏகமனதான முடிவுடன் சபையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)