இலங்கையில் வங்கிச்சேவை அல்லாத மற்றும் நிதியியல் சேவைகள் துறையில் முன்னிலை வகித்து வருகின்ற பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் அதிசிறந்த அறிக்கையிடல் தராதரங்களுக்காக, ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் மேன்மைக்காக அண்மையில் விருது அங்கீகாரத்தை சம்பாதித்துள்ளது. பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள மற்றும் நிரற்படுத்தப்படாத இலங்கை நிறுவனங்கள் மத்தியில் ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் மேன்மையை ஊக்குவிக்கும் வகையில், Institute of Certified Management Accountants of Sri Lanka (CMA Sri Lanka) ஆல் தொடர்ந்து 9 ஆவது ஆண்டாகவும் இவ்விருது நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த அறிக்கையிடல் என்பது நிறுவனமொன்று தன்னுடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு பயனளிக்கும் அதேசமயம் காலப்போக்கில் எவ்வாறு மதிப்பைத் தோற்றுவிக்கிறது, பேணிப் பாதுகாக்கிறது அல்லது சிதைக்கின்றது என்பதை விளக்கும் ஒரு வழிமுறையாகும்.
2022/23 ஆம் ஆண்டுக்கான ‘Multi-Dimensional’ என்ற பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் ஆண்டறிக்கையானது, ஒக்டோபர் 6 ஆம் திகதியன்று தாஜ் சமுத்ரா ஹோட்டலின் கிரான்ட் மார்க்கி நிகழ்வரங்கில் இடம்பெற்ற விமரிசையான விருது வழங்கல் வைபவத்தில் மீண்டும் ஒரு முறை வெற்றி வாகை சூடியுள்ளது. இந்நிகழ்வில், “மிகச் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை – கடன் மற்றும் குத்தகை – அரச துறை” (Best Integrated Report – Finance & Leasing – State) பிரிவில் இரண்டு முக்கிய விருதுகளை பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி தனதாக்கியுள்ளதுடன், “மிகச் சிறந்த பத்து” (Ten Best) ஒருங்கிணைந்த அறிக்கைகளில் ஒன்று என்ற அங்கீகாரத்தையும் சம்பாதித்து, வெளிப்படைத்தன்மை மற்றும் மதிப்பைத் தோற்றுவித்தல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் உள்ள முன்னணி நிதி நிறுவனம் என்ற தனது நற்பெயரை மீண்டும் ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது.
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷமிந்திர மர்சலீன் அவர்கள் தனது நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துகையில், “நிதியியல் அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த அறிக்கை ஆகியவற்றில் மேன்மைக்கான எமது அர்ப்பணிப்பானது பொறுப்புணர்வுடனான மற்றும் வெளிப்படையான வணிக நடைமுறைகள் மீதான எமது அர்ப்பணிப்புக்குச் சான்றாகும். இன்னும் உச்சங்களை எட்டி, எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் அதிசிறந்த மதிப்பை வழங்குவதை நாம் முன்னெடுப்பதற்கு இவ்விருதுகள் எமக்கு உந்துசக்தியளிக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிதி அதிகாரியான ஓமல் சுமணசிறி அவர்கள் அதே கருத்தினைப் பிரதிபலித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கையில், “இந்த மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளமையை நன்றியுடனும், கௌரவத்துடனும் ஏற்றுக்கொள்கின்றோம். 2014 ஆம் ஆண்டில் எமது ஒருங்கிணைந்த அறிக்கையிடல் பயணத்தை நாம் ஆரம்பித்ததிலிருந்து, நம்பகத்தன்மை, முழுமை, நிலைத்தன்மை மற்றும் ஒப்பீடு உள்ளிட்ட வழிகாட்டுதல் கோட்பாடுகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில் ஒருங்கிணைந்த அறிக்கையிடலை தொடர்ந்து மேம்படுத்துவதில் நிறுவனம் தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது. இன்னும் கூடுதலான அளவில் நிலைபேற்றியல் கொண்ட, புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய எதிர்காலத்தை நோக்கியதாக எமது அறிக்கையிடல் பயணத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்,” என்று குறிப்பிட்டார்.
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி ஆனது இலங்கையில் அனுமதி உரிமம் பெற்ற, வங்கிச்சேவை அல்லாத ஒரு நிதியியல் நிறுவனமாக செயல்பட்டு வருவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப நிதியியல் தீர்வுகளை பிரத்தியேகமாக வழங்குவதில் காண்பிக்கும் புத்தாக்கம் மற்றும் ஓயாத அர்ப்பணிப்பிற்காக பெயர்பெற்றுள்ளது. மிகவும் வலுவான அத்திவாரத்துடனும், பரந்துபட்ட உற்பத்தி வரிசையுடனும், மேன்மை மீதான அர்ப்பணிப்புடனும், நிதியியல் சேவைகள் துறையில் முன்னிலை வகிக்கின்ற ஒரு நிறுவனமாக PLC தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. மக்கள் வங்கியின் ஒரு துணை நிறுவனமாக, இலங்கையிலுள்ள மக்களுக்கு வளர்ச்சி மற்றும் சுபீட்சத்திற்கு வழிகோலி, நிதியியல் சேவைகளை வழங்குவதில் நம்பிக்கை மிக்க மற்றும் நன்மதிப்புடைய நிறுவனமாக தனது ஸ்தானத்தைத் தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது.