மத்திய ஆபிரிக்க குடியரசு தலைநகர் பங்குயியில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்கச் சென்ற அளவுக்கு அதிகமானோரை ஏற்றிய படகு ஒன்று ஆற்றில் மூழ்கியதில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ம்போக்கோ ஆற்றில் இந்தப் படகு மூழ்கும்போது அதில் 300 பேர் வரை இருந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்று 40 நிமிடங்களின் பின்னரே மீட்பு சேவையினர் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.
மக்கள் படகில் இருந்து பாய்ந்து அல்லது விழுந்த நிலையில் கரையை அடைய முயற்சிக்கும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன.
‘இந்த விபத்து பயங்கரமாக இருந்தது. எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றின் ஏழு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்’ என்று சம்பவத்தை பார்த்த ஒருவர் பிரெஞ்சு மொழி ஒளிபரப்புச் சேவையான ஆர்.எப்.ஐ. இற்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற மறுதினமான கடந்த சனிக்கிழமையும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறிச் சென்ற பின்னரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் காணாமல்போனவர்களை தொடர்ந்த தேடி வந்ததாக அங்கிருக்கும் ஏ.எப்.பி. ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.