மின்சாரம் தாக்கியதில் முன்னாள் பிரதி அமைச்சரும் எம்.பியுமான பாலித்த தெவரப்பெரும காலமானார்.
இவர் தனது தோட்டத்தில் உரமிட்டுக் கொண்டிருந்த போது, அதில் அங்குமிங்கும் மின்விளக்குகள் இடப்பட்டிருந்த நிலையில் தரையில் இருந்த கவசமிடப்படாத மின்கம்பி ஒன்றை மிதித்த நிலையில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சுமார் 40 நிமிடங்களின் பின்னரே அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
1960 மே 03இல் பிறந்த பாலித குமார தெவரப்பெரும, ஐ.தே.க. களுத்துறை மாவட்ட எம்.பியாக (2010 – 2020) பதவி வகித்ததோடு, உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் (2016 ஏப்ரல் 06 – 2018 மே 01); வனஜீவராசிகள் பிரதி அமைச்சராகவும் (2018 மே 01 – 2019) நவம்பர் 19) பதவி வகித்துள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிவதில் முன்னிற்பவர் எனும் பெயர் கொண்ட பாலித்த தெவரப்பெரும, பொதுமக்கள் சார்ந்த பல்வேறு விடயங்களுக்காக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பதும் மக்கள் மனதில் அவர் இடம்பிடிக்க காரணமாக அமைந்த விடயங்களாகும்.