2024 IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று (14) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நடப்பு IPL தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த மும்பை அணி கடைசி இரு போட்டிகளிலும் மிகவும் அபாராமாக விளையாடியிருந்தது.
மும்பை அணியின் பந்துவீச்சு இம்முறை பெரிதும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கவில்லை. முக்கிய பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தனர்.
புள்ளிப் பட்டியலில் சென்னை மூன்றாம் இடத்திலும், மும்பை அணி ஏழாம் இடத்திலும் இருக்கின்றன.
வான்கடே மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் இலங்கை வீரரான நுவன் துஷாரவை இன்றையப் போட்டியில் மும்பை அணி களமிறக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற மினி ஏலத்தில் 4.2 கோடிக்கு வாங்கப்பட்ட நுவன் துஷார நடப்பு IPL தொடரில் இதுவரை விளையாடவில்லை.
இந்நிலையில், அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மும்பை அணியில் மாற்றம் இருக்காது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் மும்பை அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட வெளிநாட்டு வீரர்களாக மாறியுள்ளனர்.
இதனால் நுவன் துஷாரவிற்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.