Tuesday, April 30, 2024
Home » பசுத்தோல் போர்த்திய நரி வேலுக்குமார்

பசுத்தோல் போர்த்திய நரி வேலுக்குமார்

- முன்னாள் அமைச்சரும் இ.தொ.காவின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு

by Prashahini
April 11, 2024 7:01 pm 0 comment

இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பைசா கூட சம்பளம் பெற்றுக் கொடுக்காமல் சந்தா மாத்திரம் பெற்றுக் கொண்டு இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சம்பள உயர்வை பற்றி விமர்சிப்பது என்பது பசுத்தோல் போர்த்திய நரி போல உள்ளதாக முன்னாள் அமைச்சரும் இ.தொ.காவின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என்று சம்பள பேச்சுவார்த்தைக்கு செல்லாத கம்பனிகளை விமர்சனம் செய்யாமல், இ.தொ.கா சம்பள பேச்சுவார்த்தைக்கு செல்லாதது போல இ.தொ.காவை விமர்சிப்பது என்பது இவர் ஒரு மன நோயாளி போல காணக்கூடியதாக உள்ளது.

வேலுகுமார் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஒரு தொழிற் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் தோட்ட தொழிலாளர்களுக்காக இதுவரை 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்தது இல்லை என்பதை நினைக்கும் போது இவருக்கு வாக்களித்த மக்களை எண்ணி வேதனை அடைகிறேன்.

2015 முதல் 2019 வரை வேலுகுமார் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், அரசாங்கத்தில் எந்த அமைச்சு பதவிகளும் வேலுகுமாருக்கு வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது
அமைச்சு பதவிக்கு ஆசைப்பட்டு தனது கட்சியின் கொள்கையை மீறி அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தும் அவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. அவருடைய தகுதி ஆராயப்பட்டே அவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வேலுகுமார் பல முறை ஜானதிபதியை ரகசியமாக சந்தித்து , தனது ஆசையை நிறைவேற்ற முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை என்பதால், இ.தொ.கா அரசாங்கத்தில் பதவி வகிப்பதை கண்டு மன விரக்தியில் குழப்பி கொண்டிருக்கிறார்.

தோட்ட தொழிலாளர்களிடம் சந்தாவை பெற்றுக் கொண்டு, 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காத கட்சி தான் வேலுகுமார் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி. இதை மூடி மறைத்து விட்டு அன்று முதல் இன்று வரை இ.தொ.க பெற்றுக் கொடுத்த சம்பளத்தில் சந்தா பெற்றுக் கொள்கிறார்.

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் பல தொழிற்சங்க பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட்டுள்ளது. அதேபோல் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தொடர்ச்சியான சம்பள உயர்வு தொடர்பான ஊடக சந்திப்புகளின் போது, தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் நியாமான சம்பள உயர்வு கிடைக்கும் எனவும்,அதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கான அனைத்து வேலைத்திட்டத்தை அன்று முதல் இன்று வரை அவர் செய்து வருகிறார். மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான சம்பள பேச்சுவார்த்தைகளின் போது அவருடைய பின்புலத்தில் இருந்த உயர்மட்ட குழுவில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன் ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு பிறகு அதே நிதானத்துடன் செயற்படுவதோடு சம்பளம் பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்காமல் செயற்படுகிறார். அவருடைய அரசியல் அனுபவத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பளம் பெற்றுகொடுப்பர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறார். சம்பள நிர்ணய சபை கூடும் திகதியை அடிப்படையாக வைத்து 30 நாட்களுக்குள் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது அது 10 அல்லது 20 நாட்களுக்கு தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்தது ஒன்றும் உலக மகா குற்றம் கிடையாது.

அவ்வாறு இருக்கும் நிலையில், கடந்த காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இ.தொ.கா எதிர் கட்சியில் இருந்து போராடி கொண்டிருக்கும் போது,வேலுகுமார் ஆளும் கட்சியில் 5 வருடம் இருந்து 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்று கொடுக்கவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.

நான் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்,ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் பல கூட்டு ஒப்பந்தத்தில்,சம்பள பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டுள்ளேன். இ.தொ.கா ஒவ்வொரு சம்பள பேச்சுவார்த்தையின் போதும் கடுமையான வாக்குவாதம், போராட்டம் செய்தே சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்துள்ளது. இ.தொ.காவை பொறுத்த மட்டில் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போதிலும் அவர் முன்வைத்த 1000 ரூபாவை இ.தொ.கா பெற்றுகொடுத்தது. அதேபோல் தற்போது இ.தொ.கா முன்வைத்த கோரிக்கையை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும்.

வேலுகுமார் பெருந்தோட்ட கம்பனிகளின் தரகராக செய்ற்பட்டு,அதிக சம்பளம் தராத கம்பனிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை இ.தொ.கா மீது திசை திருப்ப முயற்சிக்கிறார். 10 பைசா வேலுகுமார் கம்பெனிகளுக்கு எதிராக எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் இவர் கம்பனிகளுக்கு கைகூலியாக செயற்படுவதை அவருடைய அறிக்கையில் வெட்டவெளிச்சமாக காண முடிகிறது.

கம்பனிகளுக்கு மறைமுகமாக கைக்கூலி வேலைப்பார்த்து கொண்டிருக்கும் 10 பைசா வேலுகுமாருக்கு இந்த பதில் போதுமானது என நினைக்கிறேன். பசுத்தோல் போர்த்திய நரியான 10 பைசா வேலுகுமார் தன்னை நியாமானவராக இனி வரும் காலநகளில் வெளிக்காட்ட கம்பனிக்கு எதிராக இனி அறிக்கை வெளியிடுவார். வேலுகுமாரின் போலி நாடகம் இனி அரங்கேராது என தெரிவித்துள்ளதோடு ,என்னுடைய அரசியல் அனுபவத்தில் பாதியேவேலுகுமாரின் வயது. இவரை போல் பல கம்பனிகளின் கைகூலிகளை எனது வாழ்நாளில் சந்தித்துள்ளேன் எனவும்,வெறும் செயல் இன்றி வாயலே தனது வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT