டிஜிட்டல் வங்கியியல் சேவைகளினூடாக வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், யூனியன் வங்கி தனது முதலாவது டிஜிட்டல் வலயத்தை, கொழும்பு 3இல் அமைந்துள்ள தனது தலைமையகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு 24/7 நேரமும் ஸ்மார்ட் வங்கிச் சேவைகளை அனுபவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வங்கியின் டிஜிட்டல் மாற்றியமைப்பு மூலோபாயத்துக்கமைய, நீடித்த சௌகரியம் மற்றும் ஒப்பற்ற வங்கியியல் அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில், எதிர்வரும் காலங்களில் இது போன்ற டிஜிட்டல் வலயங்களை முக்கியமான கிளைப் பகுதிகளில் நிறுவுவதற்கு வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.டிஜிட்டல் வலயங்களில் தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATM), பண மீள்-சுழற்சி இயந்திரங்கள் (CRM) மற்றும் காசோலை வைப்புகள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் பலவற்றுக்கான தன்னியக்கமயமான வசதிகள் போன்றன அடங்கியிருக்கும். இவற்றினூடாக, அத்தியாவசிய வங்கிச் சேவைகளாக கருதப்படும் பண வைப்புகள், பண மீளப் பெறுகைகள், பணப்புழக்கமில்லா வைப்புகள், யூனியன் வங்கிக் கணக்குகளுக்கான பணப் பரிமாற்றங்கள் போன்றவற்றுடன், யூனியன் வங்கி கடன் அட்டைகளுக்கான கொடுப்பனவுகளுடன், கணக்கு மீதி விவரங்களை அறிந்து கொள்ளல் போன்றவற்றை எந்நேரத்திலும் மேற்கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
“வாழ்க்கையை மெருகேற்றிடும் மாற்றம்” எனும் வங்கியின் தொனிப்பொருளுக்கமைய, பெறுமதி சேர் செயற்பாடுகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சௌகரியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.