மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்கள் இரு வகைப்படும். அவற்றில் பிறரின் உடலுக்கோ, உள்ளத்திற்கோ துன்பம் விளைக்காமல் இருந்தால் அது நல்ல எண்ணங்களாக அமையும். துன்பம் விளைவித்தால் அது தீய எண்ணங்கள் இருக்கும். அதனால் நம் மனதில் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு சமூகத்தைப் பற்றியோ தீய எண்ணங்கள் வளர அனுமதிக்கலாகாது. அது எம்மை பாவங்களின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாக அமைந்துவிடும். இது குறித்து அல்-குர்ஆன், ‘முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன்’ என்று குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)எனவே, எம்மிடம் காணப்படுகின்ற தீய எண்ணங்களைக் களைந்து, நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ள இந்த உயரிய மாதத்தில் உறுதி கொள்வோம்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ்
(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்