மட்டக்களப்பில் ‘ஆணிகள் வரைந்த ஓவியம்’ எனும் தொனிப்பொருளில் பாஸ்கா நாட்டிய நாடகம் காந்தி பூங்கா திறந்தவெளியில் நடைபெற்றது.
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் இணைத்து நடாத்திய ‘ஆணிகள் வரைந்த ஓவியம்’ பாஸ்கா நாட்டிய நாடக நிகழ்வில், பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட ஆயர்.அதி. வணக்கத்துக்குரிய அருட் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
கிறிஸ்தவர்களின் புனித வாரத்தை நினைவு கூறும் முகமாக மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடிப்பில் பாஸ்கா நிகழ்வுகள் முதன் முறையாக திறந்த வெளியில் கலாசார உத்தியோகத்தர் திருமதி ரஞ்சித் அமிலினியின் நெறியாக்கத்தின் கீழ் அரங்கேற்றப்பட்டது. இதன்போது புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவி ரவிக்குமார் ஷயனாவினால் பாஸ்காவை பிரதிபலிக்கும் ஓவியம் அதிதிகளுக்கு வழங்கப்பட்டது
அதேசமயம் இந்நிகழ்வில் கலைஞர்களுக்கு அதிதிகளினால் மலர்மாலை அணிவித்து கெளரவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் நந்தன ஹெட்டியாரச்சி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி காந்த், 231 படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)