பங்களாதேஷ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் முஷ்பிகுர் ரஹீம், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக நாளை (22) ஆரம்பமாகும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும் என்று பங்களாதேஷ் உடற்பயிற்சி நிபுணர் பைஜதுல் இஸ்லாம் கான் உறுதி செய்துள்ளார்.
கடந்த திங்களன்று (18) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரண்டாவது ஓவரின்போது 36 வயதான முஷ்பீகுர் உபாதைக்கு உள்ளானார். தக்சின் அஹமது வீசிய பந்து அவரது வலது கை கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து ஆட்டத்தில் பங்கேற்றிருந்ததோடு துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு உதவினார். எனினும் போட்டிக்குப் பின்னர் செய்யப்பட்ட எக்ஸ்ரே சோதனையில் அவரது விரலில் முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் முஷ்பீகுர் 38.09 ஓட்ட சராசரியுடன் மொத்தம் 5676 ஓட்டங்களை பெற்றிருக்கும் நிலையில் அவரது விலகல் பங்களாதேஷ் அணிக்கு பின்னடைவாக உள்ளது. அவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.