அமைச்சர் டக்ளஸ் நேற்று சமர்ப்பிப்பு
வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்” எனப்படும் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில் அமைச்சு சமர்ப்பித்துள்ளது.
வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக, நிறுவப்படவுள்ள கடல் சாரணர் பிரிவுக்கு அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா நேற்று இப்பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதைத் தடுக்கும் கடற்படையின் தற்போதைய முயற்சிக்கு உதவுவதற்கே, இந்த கடல் சாரணர் படையணி
உருவாக்கப்படவுள்ளது. வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களூடாக அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாரணர் படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவை படகுகள், தற்காலத்தில் இலங்கையின் கடல் எல்லைக்குள் அதிக எண்ணிக்கையிலும், பாரிய கடற்றொழில் படகுகளிலும் அடிக்கடி நுழைவது, உள்ளூர் கடற்றொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
குறைந்தபட்சம் 500 இந்திய அடிமட்ட இழுவை படகுகள், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைகின்றன. ஒவ்வொரு படகும் 1,000 கிலோ மீன்கள் மற்றும் இறால்களை பிடிப்பதாகவும் அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத இழுவைப் படகு மூலம் இலங்கைக்கு நாளாந்தம் சுமார் 350 மில்லியன் ரூபா வரையில் இழப்பு ஏற்படுகிறது.