யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்.இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்.மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்சிபி விக்கிரமசிங்கவை, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் ஜனாதிபதியின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா சுதீஸ்நர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டினுள் இதுவரை விடுவிக்கப்படாமலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவசாய காணிகள் விடுவிப்பு, இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள ஆலயங்களில் வழிபட அனுமதிப்பது தொடர்பில் ஆராய்ப்பட்டபோதே ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து 300 ஏக்கர் விவசாய காணிகள் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது குறித்து இராணுவத்தினர் தற்போது அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.
யாழ். விசேட நிருபர்