பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்படாத அரசாங்க காணிகளை வர்த்தக பெருந்தோட்ட முகாமைத்துவ திட்டத்திற்காக பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் போன்ற அரசாங்கத்தின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான பெருமளவு காணிகள் காணப்படும் நிலையில் சட்டப் பிரச்சினைகள் நிறுவனத்திற்குள் இடம்பெறும் சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணத்தினால் நீண்டகாலம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமல் எந்தப் பயனுமின்றி காணப்படுவதாக வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதுபோன்று பெருமளவு காணிகள், பல்வேறு பிரதேசங்களிலும் காணப்படுவதுடன் அதில் ஏற்றுமதி பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுதல் ஏனைய பண்ணைகளை உருவாக்குதல் போன்றவற்றிற்கு தேர்ந்தெடுக்க முடியுமென்றும் அந்தவகையில் நீண்டகால முதலீட்டுக்காக குத்தகை அடிப்படையில் அதனை பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அதற்காக தேசிய தொழில் முயற்சியாளர்களையும் ஏற்றுக்கொண்டு சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் பயனுள்ளதாக அந்தக் காணிகளை முன்னெடுப்பதற்கு அரச பெருந்தோட்ட மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சின் மூலம் விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்