செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை கல்விக் கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 02 இல், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதற்கான தேசிய வழிகாட்டல் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த செயலணிக் குழு மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி அந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வழிகாட்டல் மற்றும் திட்டமிடலில் ஒரு அம்சமாக சாதாரண கல்விக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக முன்னோடி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த முன்னோடித் திட்டமாகும்.
மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனம் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச விடயங்கள், தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தேவையான அடிப்படை மனித வளங்களைக் கொண்டுள்ள பாடசாலைகளின் 08ஆம் தரம் முதல் மேற்படி முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வசதிகளின் கீழ், முன்னோடி திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கும் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பிக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மூலம் 100 ஆசிரியர்கள் பயற்றுவிக்கப்படவுள்ளனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)