வெளிநாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நபரொருவரின் உடைமைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஒருமணி நேரத்தில் திருட்டுப் போன பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நீண்டகாலமாக வெளிநாட்டில் வசித்து வந்தவர் விடுமுறையை கழிக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்துள்ளார். வீட்டினுள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நுழைந்த திருடன், வீட்டிலிருந்த வெளிநாட்டு பிரஜையின் மடிக்கணனி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடி சென்றுள்ளார்.
இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்தத் துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(யாழ்.விசேட நிருபர்)