வெலிகம பகுதியில் செவ்வாய்க் கிழமை (13) மாலை திடீரென ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால், கடும் சுழல் காற்றுடனான அடை மழை பெய்ததோடு வீசிய கடும் காற்றினால் கட்டடங்களின் கூரைத் தகடுகள் அள்ளுண்டு சென்றதுடன் பாரிய மரங்கள், கிளைகளும் பாதையில் முறிந்து விழுந்தன.
இதன் காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியில் கப்பரத் தொட்ட பகுதியினுடனான வாகனங்கள் சென்று கொண்டிருக்கையில், வான் ஒன்றின் மீது பாரிய மரக்கிளையொன்று விழுந்ததில் அதில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வானுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தும் சுமார் அரை மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
வெலிகம நகர சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பாதைகளில் விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு தடைப்பட்டிருந்த போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் வெலிகம நகரில் ஹெட்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பெளத்த விகாரையான போதி மழு விகாரையில் சுமார் 500 வருடங்கள் பழைமை வாய்ந்த மரத்தின் உயர் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு அது முறிந்து விழும் அபாயம் தோன்றியுள்ளதால் அப்பகுதி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அவ் வீதியை மறித்து மரத்தை அகற்றும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. தற்காலிகமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகின்றனர்.
வெலிகம தினகரன் நிருபர்