பாடசாலைகளின் சுற்றுப்புறங்களில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளதால், 4,876 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இப்பாடசாலைகளைச் சுற்றி போதைப் பொருள் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் 517 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கிணங்க மேற்படி பாடசாலைகள் தொடர்பில் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலைகளை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் சமூகத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் 5,133 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைகளின்படி, 4,876 பாடசாலைகளில் போதைப்பொருள் அபாய நிலை ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 107 பாடசாலைகள் தொடர்பில் போதைப்பொருள் அபாயம் உள்ளதாக அக்குழுக்கள் குறிப்பிட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பாடசாலைகள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.