கட்சியையும், தலைமையையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசா எச்சரித்துள்ளார். பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை எச்சரிக்கும் வகையிலேயே, சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) தயா ரத்நாயக்கவை கட்சியின் மூத்த ஆலோசகராக நியமிக்க சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா விமர்சித்திருந்தார்.இவ்விமர்சனம் வௌியாகி சில நாட்களுக்குப் பின்னர்,எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாசவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இது குறித்து சஜித்பிரேமதாசா தெரிவித்ததாவது, “யாருக்கு கட்சி உறுப்புரிமை வழங்க வேண்டும் என்று எவரும் எனக்குச் சொல்ல வேண்டியதி ல்லை. எனக்கு அறிவுரை கூற முயல்பவர்களை நான், புறக்கணித்து விடுவேன். கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.
கட்சியைப் பாதுகாப்பதும், எதிர்காலத் தேர்தல்களில் வெற்றியை நோக்கி நகர்த்துவதும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கடமையாகும். இக்கடமையைச் செய்ய முடியாதவர்கள் வெளியேற வேண்டும். எனது தந்தைக்கும், எனக்குமிடையே ஒற்றுமையை வரைய சிலர் முயற்சிக்கின்றனர். இருப்பினும், எனது தந்தையின் அபிவிருத்தி மாதிரியை மட்டுமே நான்,ஏற்றுக்கொள்கிறேன். தமக்கும் தமது தந்தைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.