Tuesday, April 30, 2024
Home » சிறுவர் போஷாக்கை மேம்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி விசேட கவனம்
மக்களின் வறுமையை போக்கி

சிறுவர் போஷாக்கை மேம்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி விசேட கவனம்

by gayan
February 3, 2024 6:15 am 0 comment

மக்களின் வறுமையை போக்கி சிறுவர்களின் போஷாக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும், அதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ வேலைத்திட்டம் அரசியல் சாராமல் இந்நாட்டு மக்களின் வறுமையை போக்குவதற்கான பெரும் பணியாக அமைந்துள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ரமதா ஹோட்டலில் (01) பாடசாலை மாணவர்களின் மதிய உணவு வேலைக்கான ஊட்டச்சத்து அரிசி (Fortified Rice) வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கில் விவசாய

மற்றும் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சு, கல்வி அமைச்சு, உலக உணவு வேலைத்திட்டம் (World Food Programme),உணவு மேம்பாட்டுச் சபை, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் (Bill & Melinda Gates Foundation) உள்ளிட்ட தரப்புகள் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

பிள்ளைகளின் இரத்தச் சோகை, நினைவாற்றல் குறைபாடு மற்றும் வளர்ச்சி குறைப்பாடு உள்ளிட்ட நோய்களுக்கான தீர்வாக இத்திட்டம் அமைந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ் 05 இலட்சம் பிள்ளைகளுக்கு அடுத்த 08 மாதங்களில் ஊட்டச்சத்து நிறைந்த மதிய உணவு வழங்கப்படவுள்ளது.

இதன்போது இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த அரிசி கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது. எதிர்கால சந்ததியை ஆரோக்கியமானதாக உருவாக்கும் அதேநேரம் போஷாக்கை வயிற்றுப் பசியை போக்குவதாக மாத்திரம் கருதாமல் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கிய காரணியாகவும் பார்க்க வேண்டுமென்றும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த அவர், குறிப்பாக பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் (Bill and Melinda Gates) ஒத்துழைப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்த இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், உலக உணவு வேலைத் திட்டத்தின் தலையீட்டின் பலனாக 2003ஆம் ஆண்டு போஷாக்குத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த சாகல ரத்நாயக்க,

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கின் 4 மாவட்டங்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கத்தின் பின்னர் 06 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது. அமைச்சுகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுவாக முன்னெடுக்க கிடைத்துள்ளமை மகிழ்ச்சிகுரியது.

கொவிட் – 19 தொற்று பரவலுடன் நாட்டின் பொருளாதாரம் முன்னொருபோதும் இல்லாத வகையில் சரிவை கண்டது. அதனால் இலங்கையின் வறுமை நிலையும் குறிப்பிடத்தக்களவில் உயர்ந்தது.

இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு திரும்பியுள்ளதுடன் மக்களின் வறுமையை ஒழிப்பதில் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது.

நமது நாட்டில் வறுமையை போக்கவும், மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வந்தன. சமுர்த்தி வேலைத்திட்டம் பிரதான இடத்தை பெற்றதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்தினூடாக அது மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT