தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும் கடைசி எதிர்பார்ப்புடன் இலங்கை இளையோர் அணி போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கவை இன்று (02) எதிர்கொள்ளவுள்ளது.
ஏற்கனவே சுப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் 3 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி சுப்பர் சிக்ஸ் குழு 2 புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொட்ச்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெறும் போட்டி இலங்கை அணியின் கடைசி சுப்பர் சிக்ஸ் ஆட்டமாகும். இலங்கை அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம் என்பதோடு மற்ற போட்டிகளின் முடிவுகளும் தமக்கு சாதகமாக அமைய வேண்டும்.
புள்ளிப்பட்டியலில் சினெத் ஜயவர்தன தலைமையிலான இலங்கை தற்போது 2 புள்ளிகளுடன் காணப்படுவதோடு முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. அரையிறுதிக்கும் இந்தக் குழுவில் இருந்து இரண்டு அணிகளே தகுதி பெறும்.
இந்நிலையில் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இன்றைய ஆட்டத்தை வெல்வது மாத்திரமன்றி நிகர ஓட்ட விகிதத்திலும் பின்தங்கி இருப்பதால் அதிக இடைவெளியில் வெற்றியீட்டுவது அவசியமாகும். மறுபுறம் மேற்கிந்திய தீவுகள் அணி தனது கடைசிப் போட்டியில் இன்று அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்திக்க வேண்டும்.
இளையோர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.